

அகமதாபாத்,
உலகின் கச்சா எண்ணெய் -எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது.
இந்த ஜலசந்தியை கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்தது. மேலும் கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டன.
இதனால் இந்தியாவை நோக்கி வரும் வணிக கப்பல்கள் உள்பட ஏராளமான கப்பல்கள் அந்த ஜலசந்தியை கடக்க முடியாமல் தவித்தன.
இதற்கிடையே இந்திய கப்பல்கள், ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடப்பதற்கு ஈரான் அனுமதி அளித்தது.
இந்தநிலையில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (எல்.பி.ஜி) ஏற்றிக்கொண்டு இந்தியாவை நோக்கி புறப்பட்ட ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்தது.
இந்த கப்பல்களில் தலா 40,000 மெட்ரிக் டன் அளவு எரிவாயு உள்ளது. இதற்கிடையே ஷிவாலிக் கப்பல் இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் ஈரான் அருகே உள்ள மிகவும் ஆபத்தான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்துள்ளது. அதை தொடர்ந்து நந்தா தேவி கப்பலும் விரைவில் கந்த்லா துறைமுகத்தை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.