

இலவச சிகிச்சை
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மாத வருமானம் ரூ.2 ஆயிரத்து 499 வரை உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கிடையே இலவச சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக வருமானம் உடையவர்களும் வருமானம் குறைவாக இருப்பதாக வருவாய்த்துறையிடம் சான்றிதழ் பெற்று இலவச சிகிச்சையை பெற்று வருகின்றனர்.
ரேசன்கார்டு
இத்தகைய சூழ்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவையை சேர்ந்த மாத வருமானம் ரூ.2 ஆயிரத்து 499-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஜிப்மரில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதன் காரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நோயாளிகள் தங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உளளவர்கள் என்பதை நிரூபிக்க மாநில அரசுகள் வழங்கிய ரேஷன்கார்டுகளை (சிவப்பு கார்டு) கொண்டுவர வேண்டும். இந்த உத்தரவு அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் வேண்டுகோள்
இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரிக்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையை தொடர ஜிப்மர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.