

புதுடெல்லி,
அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது தற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் அணி அதிமுக பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அடுத்து வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தையும், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றினையும் பயன்படுத்த அனுமதிக்க கோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 9 இல் வெளியானது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை மேலுரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய தினகரன், தனது அமைப்பின் பெயரையும் அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம், கட்சி பெயர் ஒதுக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மதுசூதனன், செம்மலை ஆகியோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.