மத்திய பிரதேசம்: மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
representative image
representative image
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஹைதர்கர் கிராமத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில், காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) எடுக்க டிரைவர் முயன்றார். அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஷகீலா (30), நிகாட் (13), அயன் (10), ஷாத் (7) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கார் பள்ளத்தில் கவிழ்ந்ததும், கிராமத்தினர் உடனடியாக விரைந்து, மூன்று பேரின் உடல்களை மீட்டனர். காருக்குள் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல், மாநில பேரிடர் மீட்புப்படையால் மீட்கப்பட்டது.

காரில் பயணம் செய்த மேலும் இருவரை கிராமத்தினர் உயிருடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com