மத்திய பிரதேசம்: வழிபாட்டுத்தளங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி ஒலிபெருக்கிகள் வைக்க தடை

ஒவ்வொரு மாவட்டத்திலும் வழிபாட்டுத் தளங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவியேற்றார். இவரது தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தளங்களில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் வைக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச ஒலி கட்டுப்பாட்டுச் சட்டம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு வழங்கிய ஒலி மாசு விதிகள் 2000(ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும் எனவும், விதிகளை மீறுவோர் மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மத தலைவர்களிடம் தகவல் தெரிவித்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com