

போபால்,
மத்திய பிரதேச மாநிலம் மோரெனா மாவட்டத்தில் உள்ள ஹேதம்பூர்-கேர் ரெயில்வே வழித்தடத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் திடீரென வேகத்தை குறைத்து சற்று மெதுவாக செல்லத் தொடங்கியுள்ளது.
அப்போது யாரோ ரெயிலில் தீ பிடித்துவிட்டது என வதந்தியை பரப்பியதாக தெரிகிறது. இதனை நம்பி ரெயிலில் இருந்த பயணிகள் பயந்துபோய் வெளியே குதிக்கத் தொடங்கினர். அவ்வாறு குதித்தவர்களில் சிலர் அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த ரெயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்றது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.