மத்திய பிரதேசம்: சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வேன்; 9 பேர் பலி

கிராமவாசிகள், உயிரை பணயம் வைத்து, கயிறுகளை கட்டி மீட்புப்பணியில் ஈடுபட்டதில் ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராஜ்கர்

மத்திய பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்திற்கு இடையே சென்ற வேன் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு 9 பேர் பலியானார்கள்.

கனமழை, வெள்ளம்

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில், சாரங்பூர் நகருக்கு அருகே இன்று காலை 9 மணியளவில், வேன் ஒன்று 11 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது.

இதனால், சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அந்த வேன் சாக்கடை நீர் ஓடக்கூடிய கால்வாயை கடந்து செல்ல முயன்றபோது, அதில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். எனினும், இரண்டு பேர் நீந்தி பாதுகாப்பாக தப்பினர்.

எச்சரிக்கை

இதுபற்றி சிலர் கூறும்போது, உள்ளூர் நிர்வாக ஊழியர்களும், கிராம மக்களும் வேன் ஓட்டுநரிடம் மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை அலட்சியப்படுத்தி விட்டு அவர் தொடர்ந்து சென்றிருக்கிறார். இதில், பலத்த நீரோட்டம் வேனை தண்ணீருக்குள் அடித்து சென்று விட்டது என்றனர்.

கிராமவாசிகள், உயிரை பணயம் வைத்து, கயிறுகளை கட்டி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு சிறுமி உள்பட ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com