மத்திய பிரதேச பெண் வட்டாட்சியர் கைது: ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண மோசடி அம்பலம்

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற மத்தியப் பிரதேச பெண் தாசில்தார், வெள்ள நிவாரண ‘மோசடி’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச பெண் வட்டாட்சியர் கைது: ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண மோசடி அம்பலம்
Published on

குவாலியர்,

மத்திய பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள சந்திரவாட்னி நாக்கா பகுதியில் அமிதா சிங் என்பவர் வாழ்ந்து வந்தார். அமிதா சிங் விஜய்பூர் தாலுக்காவின் தாசில்தார்பதவி வகித்து வந்தார். இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தேசிய அளவில் பிரபலமானார்.

தனது அறிவாற்றலால் அனைவரையும் கவர்ந்த அவர், அந்த போட்டியில் ரூ. 50 லட்சம் வென்று சாதனை படைத்தார். பின்னர் அவர் ஒரு பெண் அரசு அதிகாரியாக பிரபலமானார். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் பயங்கர வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஏழை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர். வட்டாட்சியரான அமிதா சிங்கிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை கொடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அமிதா சிங் தலைமையிலான குழுவினர், உண்மையான பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்காமல், போலி கணக்குகளை உருவாக்கி அதில் சுமார் ரூ. 2.5 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து. அமிதா சிங்கை போலீசார் கைது செய்தனர்

முன்னதாக அமிதா சிங் கைது செய்யப்படுவதை தவிர்க்க பல முயற்சிகள் நடந்ததாக தெரிகிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று 'முன்ஜாமீன்' தாக்கல் செய்தார். ஆனால், மக்களின் துயரத்தை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கூறி நீதிமன்றங்கள் அமிதா சிங்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டன.

இதனைத்தொடர்ந்து அமிதா சிங், வட்டாட்சியர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். நேற்று குவாலியரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அமிதா சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com