

போபால்,
மத்தியபிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் பரபூர் பைஹடோலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் கன்ஹா தேசிய பூங்கா அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சுகுனி பாய் துருவ் (வயது 30). இவர் நேற்று நள்ளிரவு தனது குடிசை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, குடிசை வீட்டிற்குள் புகுந்த புலி சுகுனி பாயை தாக்கியது. பின்னர், அவரை 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றுள்ளது.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சுகுனி பாய் துருவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.