மதுரை ஆதினம் மறைவு: ராகுல்காந்தி இரங்கல்

மதுரை ஆதினம் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம் மறைவு: ராகுல்காந்தி இரங்கல்
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். இதில் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆக இருந்தார்.

இவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், 'தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருத்தமும், துயரமும் அடைந்தேன். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்மந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான ஆதீனமாகும்.

ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு கருத்துகளை கூறி, மக்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் செயல்பட்டவர் மதுரை ஆதீனம். பொதுவாக, ஆதீனத்தின் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினைகள் குறித்து கருத்து கூறுவதை தவிர்ப்பார்கள்.

ஆனால், அத்தகைய நடைமுறையை கையாளாமல் வெகுஜன கருத்தோடு தம்மை இணைத்துக் கொண்டு மதுரை ஆதீன பீடத்தில் பொறுப்பு வகித்தவர் அருணகிரிநாதர். குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com