

மும்பை,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. நாராயண் ரானே. இவர் மும்பையில் கடந்த சனிக்கிழமை மக்கள் ஆசி யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரையின் போது நாராயண் ரானே மராட்டிய முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினா.
ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தியபோது, கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின உரையாற்றிய உத்தவ் தாக்கரே, இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தை கூட மறந்துவிட்டதாக நாராயண் ரானே தாக்கிப்பேசினார்.
இதுபற்றி நாராயண் ரானே பேசுகையில், முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சுதந்திர தின உரையின் போது ஆண்டை கணக்கிட்டு கூறுமாறு பின்னால் திரும்பி உதவியாளரிடம் கேட்கிறார். நான் அங்கு இருந்து இருந்தால், அவரை ஓங்கி அறைந்து இருப்பேன் என்றார். நாராயண் ரானேவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய நாராயண் ரானே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாராயண் ரானேவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கும்படி நாராயண் ரானே நேற்று ராய்கட் மாவட்டத்தில் உள்ள மஹட் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று இரவு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நாராயண் ரானேவுக்கு கோர்ட்டு 15 ஆயிரம் ரூபாய் பிணையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.