

மும்பை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மும்பை பைகுல்லாவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் அந்த சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஆன்டிஜென் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் இந்திராணி உள்பட சுமார் 40 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட 40 பெண் கைதிகளையும் பைகுல்லாவில் உள்ள பட்டான்கர் பள்ளியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரே ஒரு பெண் கைதியின் உடல்நிலை மோசமடைந்ததால் செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.