அரசு விமானத்தில் இருந்து மராட்டிய கவர்னர் இறக்கி விடப்பட்ட விவகாரம்; அரசியல் சாசன பதவிக்கு அவமதிப்பு; மன்னிப்பு கோர பா.ஜனதா வலியுறுத்தல்

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்
Published on

இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

குழந்தை தனம்

இது துரதிருஷ்டவசமான சம்பவம். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் மாநிலத்தில் நடந்தது கிடையாது. கவர்னர் என்பவர் தனிநபர் அல்ல. அது அரசியல் சாசன பதவி. கவர்னர் தான் முதல்-மந்திரி, மந்திரிகளை நியமிக்கிறார். அரசியல் சாசன பதவியை மாநில அரசு அவமதித்து உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும். மாநிலத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்ய கவர்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குழந்தை தனமானது. இதுபோன்ற அகங்காரம் கொண்ட அரசை நான் பார்த்தது இல்லை.

இது தனியார் சொத்து அல்ல. மாநில அரசு தெரு சண்டை போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சினை கவர்னரை பாதிக்காது. ஆனால் மாநிலத்தின் மதிப்பை குறைக்கும்.

வேண்டுமென்றே...

அரசின் விமானம் தேவைப்படும்போது பொது நிர்வாகத்துறைக்கு கவர்னர் அலுவலகம் கடிதம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு ஒப்புதல் வழங்கப்படும்.இந்த சம்பவத்தில் கவர்னரின் முழு பயண விவரம் அரசின் பொது நிர்வாகத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைபற்றி அரசின் தலைமை செயலாளர் அறிந்துள்ளார். இது தொடர்பான கோப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கவர்னர் விமானத்தில் ஏறி அமர்ந்தபோதிலும் வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு உள்ளார்.

கவர்னருக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

இதேபோல இந்த விவகாரத்தில் மாநில அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com