

மும்பை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வீசி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு முதல் கட்டமாக மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெம்டெசிவிரை பிரித்து வழங்கி உள்ளது.
இதில் சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மராட்டியத்துக்கு மத்திய அரசு 10 நாட்களுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரெம்டெசிவிரை வழங்கி உள்ளது. இது மராட்டியத்துக்கு தேவையானதில் 50 சதவீதம் மட்டும் தான் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கவலை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில அரசுக்கு தினந்தோறும் 50 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஒரு நாளுக்கு 26 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது அடுத்த 10 நாட்களுக்கு மட்டும் தான் போதுமானதாக இருக்கும்..
எனவே மராட்டியத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுத உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.