

சந்திராப்பூர்,
மராட்டியத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரெயில்வே சந்திப்பில் இரண்டு நடைமேடைகளை இணைக்க கூடிய நடைமேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து உள்ளது.
அது ரெயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்து உள்ளது. இதில், நடைமேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 48 வயது பெண்ணும் ஒருவர்.
இதனை தொடர்ந்து, இந்திய ரெயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது.
இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதற்கு முன் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி மத்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி ஆய்வு பணி நடந்து வருகிறது. எனினும் நடைமேம்பாலம் இடிந்து விழவில்லை ஒன்றும், அதில் இருந்த ஸ்லாப் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது என்றும் ரெயில்வே நிர்வாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.