

ஷீரடி,
மராட்டியத்தில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறும்பொழுது, சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம் ஆகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என கூறினார். இது ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அவர்கள் நாளை பந்த் நடைபெறும் என அறிவித்தனர்.
இதனை அடுத்து, ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி நாளை முதல் மூடப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது என தகவல் வெளியானது. இந்த விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள கிராமவாசிகள் உடனான கூட்டமொன்று இன்று மாலை நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த செய்தியில் உண்மையில்லை என கோவில் நிர்வாகம் விளக்கமளித்து உள்ளது.
ஷீரடி சாய்பாபா கோவில் நாளை மூடப்படும் என வெளியான தகவலில் உண்மையில்லை. நாளை கோவில் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கோவிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நாளை நடைபெறும். மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்படும். அதனால் பக்தர்கள் அனைவரும் வருகை தருவதற்கு தடையில்லை என கோவில் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
எனினும், ஷீரடியில் நாளை உணவு விடுதிகள், ஓட்டல்கள், தர்மசாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட கூடும் என்று கூறப்படுகிறது.