மராட்டியம்: நகராட்சி அதிகாரி அறையில் தெரு நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நூதன போராட்டம்

நாய்க் கடியால் பலர் காயமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் யுவசேனா அமைப்பினர் பலமுறை புகார் அளித்தனர்.
மராட்டியத்தில் நகராட்சி அதிகாரி அறையில் தெரு நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நூதன போராட்டம்.
நூதன போராட்டம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் நகராட்சி அலுவலகத்தில், தெரு நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரி யுவசேனா அமைப்பினர், அதிகாரியின் அறையிலேயே நாய்களை அவிழ்த்து விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெரு நாய்களின் தொல்லை- புகார்

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் தெருக்களில் நடக்கவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. நாய்க் கடியால் பலர் காயமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் யுவசேனா அமைப்பினர் பலமுறை புகார் அளித்தனர்.

நூதன முறையில் போராட்டம்

இருப்பினும் அதிகாரிகள் எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாசிக் மாவட்ட யுவசேனா தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில், அக்கட்சியினர் நேற்று (புதன்கிழமை) நிபத் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, அவர்கள் சாக்குகளில் கட்டி கொண்டு வந்திருந்த சில தெரு நாய்களை, நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலக அறையிலும், அவரது மேசை மீதும் திடீரென அவிழ்த்து விட்டனர்.

இதனால் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரியின் மேசைக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையையும் அணிவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த திடீர் போராட்டத்தால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி அதிகாரியின் உறுதி

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி நிபத் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தவும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரே உறுதி அளித்தார். அதன் பின்னரே போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்திற்குள் நாய்களை அவிழ்த்து விட்ட இந்த நூதன போராட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com