காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றம்: பதவி இழந்த குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சி பதவிகள் மாற்றப்பட்டத்தில் பதவி இழந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா
காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றம்: பதவி இழந்த குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா
Published on

புதுடெல்லி

அண்மையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கடசியின் பெரிய மறுசீரமைப்பில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரியானாவின் பொறுப்பில் இருந்த குலாம் நபி ஆசாத்துக்கு பதில் விவேக் பன்சால் மாற்றப்பட்டுள்ளார்.

மறுசீரமைப்பிலிருந்து மிகப்பெரிய லாபம் ஈட்டியவர் ராகுல் காந்தி விசுவாசி ரன்தீப் சுர்ஜேவாலா ஆவார். இவர் காங்கிரஸ் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் உயர் சக்தி கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்று உள்ளார்.

சோனியா காந்திக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்ட ஜிதின் பிரசாத் பதவி உயர்வு பெற்றுள்ளார். மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பொறுப்பாளராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி வதேரா தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராகவும், ராகுல் காந்தி விசுவாசி மாணிக்கம் தாகூர் தெலுங்கானாவின் புதிய செயலாளராகவும் இருப்பார்கள்.

குலாம் நபி ஆசாத் தவிர, அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நிறுவன விஷயங்களில் சோனியா காந்திக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் அம்பிகா சோனி இடம்பெற்று உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com