

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்ததை வைத்து தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநில இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில், படத்தின் டிரைலரை டுவிட்டரில் பகிர்ந்த பா.ஜனதா, ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள், என குறிப்பிட்டுள்ளது அரசியல் விவாதத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.
இந்த திரைப்படம் பா.ஜனதாவின் பிரசாரமாகும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இந்நிலையில் ராஷ்டீரிய ஜனதா தளம் ரபேல், ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக படம் எடுக்கலாமே என விமர்சனம் செய்துள்ளது.
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் மனோஜ் ஜா ரபேல் விமான ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் தற்கொலை, நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி தொடர்பாக ஏன் திரைப்படங்களை தயாரிக்கவில்லை? நாங்கள் இந்த படங்களை எதிர்பார்க்கிறோம். இது ஆக்சிடென்டலாக நடக்கவில்லை (படம் எடுக்கப்பட்டது). ஒரு அரசியல் கட்சி, ஒரு படத்தை விளம்பரம் செய்வது இதுதான் முதல் முறை, என்று விமர்சனம் செய்துள்ளார்.