பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்; பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்


பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்; பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்
x

கர்நாடக அரசு மொழிசிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக, அந்த மசோதாவை எதிர்க்கும் என கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.

பெங்களூரு,

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மலையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், முதல் மொழியாக மலையாளம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக மலையாள மொழி மசோதாவையும் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், கேரள எல்லையையொட்டிய காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் இதனை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், இந்தியாவின் நாகரீக வலிமையானது அதன் பன்முகத்தன்மையிலேயே அச்சமின்றி எப்போதும் நிலை கொண்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக எல்லை பகுதிகளான காசர்கோடு போன்றவை உள்ளன. இந்த பகுதிகளில் மலையாளம், கன்னடம், துளு, பியரி மற்றும் பிற மொழிகளும் நல்லிணக்கத்துடன் அன்றாட வாழ்க்கையை வளர்த்து வருகின்றன. கல்வி மற்றும் பிற அடையாளங்களை பல தலைமுறைகளுக்கும் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டு உள்ளார்.

சிறுபான்மை சமூகத்தினருக்கான அடையாளம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் வடிவாக அவை திகழ்கின்றன. இந்த நிலையில், ஒரு தனிப்பட்ட மொழியை கட்டாயப்படுத்துவது, அந்த குழந்தைகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தி விடும் என தெரிவித்து உள்ள அவர், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டார். அந்த மசோதாவை, மொழிசிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக கர்நாடக அரசு எதிர்க்கும் என்றும் அவர் கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.

1 More update

Next Story