

கொல்கத்தா,
மேற்கு வங்கத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பா.ஜனதா 207 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி கூறியதாவது:"நாங்கள் மக்களின் தீர்ப்பால் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டோம். எனவே, எனது ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை.
நாங்கள் தோற்கவில்லை, வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 100 இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் பா.ஜனதாவுடன் போராடவில்லை, பா.ஜனதாவுக்காகப் பணியாற்றிய தேர்தல் ஆணையத்துடன் போராடினோம். வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம். சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் என்னிடம் பேசி ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்றார். இதனால் மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம், ராஜினாமா செய்ய மறுப்பதால் மட்டுமே மம்தா பானர்ஜி முதலமைச்சராகத் தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விகாஷ் சிங் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 164ஆவது பிரிவின்படி, ஒரு முதல் மந்திரி சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிப்பார் என்றும் அந்த பெரும்பான்மையை இழந்தவுடன், அவரது அரசு அரசியலமைப்பு ரீதியாக நீடிக்க முடியாததாகி விடும்” என்றார். புதிய முதல் மந்திரிக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும், மம்தாவின் பதவி தானாகவே காலியாகிவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.