துணிச்சலான பெண்.. மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் - சுப்பிரமணியசாமி

மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் துணிச்சலான பெண் என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
துணிச்சலான பெண்.. மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் - சுப்பிரமணியசாமி
Published on

கொல்கத்தா,

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியசாமி, கொல்கத்தாவில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்வில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'இன்றைக்கு, ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாத எதிர்க்கட்சி தேவை. பலர், தற்போதைய மத்திய அரசை எதிர்த்து ஒருகட்டத்துக்கு மேல் போகாமல் உள்ளனர். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம்தான் காரணம். இந்த நிலை, இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் துணிச்சலான பெண். அவரை மிரட்ட முடியாது. மம்தா கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடியவிதத்தை பாருங்கள்.' என்றார்.

'இன்று நாட்டில் சக்திவாய்ந்த பெண் யார்?' என்ற கேள்விக்கு, 'ஒரு காலத்தில் ஜெயலலிதா இருந்தார். அப்புறம் ஒரு காலத்தில் மாயாவதியை அவ்வாறு நினைத்தேன். தற்போதைய சூழ்நிலையில் சக்திவாய்ந்த பெண் மம்தாதான். அவர்தான் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கக்கூடியவர்.' என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com