

கொல்கத்தா,
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுடைய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் (மானிய விலையிலானது) ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர்களையும் பொதுத்துறை நிறுவனங்கள் வினியோகித்து வருகின்றன. சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை வாட் வரி நீங்கலாக மாதம் தோறும் ரூ.2 உயர்த்தப்பட்டு வருகிறது. சரக்கு சேவை வரி அமலுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 1-ந் தேதி சிலிண்டரின் விலை 32 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
2018 மார்ச் மாதம் முதல் மானியம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா அரசு பணம் குறித்தே கவலை கொள்கிறது என விமர்சனம் செய்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், நான் உண்மையில் சாமானியர்கள் பற்றி கவலை கொண்டு உள்ளேன். முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் திரும்ப பெறப்பட்டது, இப்போதும் நடந்து உள்ளது. பாரதீய ஜனதா மக்களை பற்றி கவலைக் கொள்வது கிடையாது. அவர்களுடைய கவலை அனைத்தும் பணம் குறித்தே உள்ளது.
பாரதீய ஜனதா அதனுடைய சமூக பொறுப்பை எப்படி தட்டி கழிக்கலாம்? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அவர்களுடைய பொறுப்பு எங்கே? பாரதீய ஜனதா அனைத்து நிலையிலும் தன்னுடைய பொதுக் கடமையில் இருந்து விலகி செல்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.