

கொல்கத்தா,
2019 தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது. பா.ஜனதா தலைவர்களை தீவிர பிரசாரத்தில் களமிறக்குகிறது. பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் பிரசாரம் செய்ய மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜனதா அறிவித்துள்ளது. கரக்பூர் பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகானுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என பா.ஜனதா கூறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மேற்கு வங்காள மாநில அரசு மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதியே ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரக்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.