'மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி' - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

கொல்கத்தா,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.

அண்மையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடவும் கட்சி தயங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த முறை மம்தா பானர்ஜியின் தயவில் தேர்தல் நடைபெறாது. மம்தா பானர்ஜி ஒதுக்கிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்துள்ளது.

தேர்தலில் எப்படி போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் அவர் ஆட்சிக்கு வந்தார்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com