ரூ.32 லட்சம் பணத்துக்காக நடந்த கொடூரம்.. வளர்ப்பு தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மகனுக்கு தூக்கு

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து தீபக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
ரூ.32 லட்சம் பணத்துக்காக நடந்த கொடூரம்.. வளர்ப்பு தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மகனுக்கு தூக்கு
Published on

ஷியோபூர்,

மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உஷா தேவி- புவேந்திர பச்சவுரி தம்பதி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் 20 ஆண்டுகளுக்கு முன் குவாலியரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து தீபக் என பெயரிட்டு வளர்த்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு தீபக் தனது வளர்ப்பு தந்தை இறந்த பிறகு அவரது வைப்புத்தொகை ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்தை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.

பின்னர் தனது வளர்ப்பு தாயின் கணக்கில் இருந்த ரூ.32 லட்சத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கு உஷா தேவி சம்மதிக்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய கடந்த ஆண்டு மே மாதம் தீபக் முடிவு செய்தார். இதற்காக மாடிப்படி ஏறியபோது அவரை கீழே தள்ளிவிட்டார். ஆனால் அதில் உஷா தேவி பிழைத்து கொண்டார்.

பின்னர் தாயை இரும்பு கம்பியால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து உடலை வீட்டு சுவரில் மறைத்து வைத்துவிட்டு போலீசாரிடம் காணவில்லை என புகார் அளித்தார். ஆனால் போலீசார் விசாரணையில் தீபக் தனது வளர்ப்பு தாயை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 இன் கீழ் குற்றவாளி எனக் கண்டறிந்து, கூடுதல் அமர்வு நீதிபதி எல்.டி. சோலங்கி தீபக்கிற்கு தூக்கு தண்டனை விதித்தார்.

மேலும் இந்திய பாரம்பரியத்தில் ஒரு தாய் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார், அவரது கொலை மன்னிக்க முடியாதது என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com