

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவன் பகுதியை சேர்ந்த இளைஞர் சுபாஷ். இவரும் ராதிகா (வயது 28) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். சுபாஷ், ராதிகா இருவரும் துர்காபூரில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து அதில் லிவ் இன் முறையில் கணவன், மனைவிபோல் வசித்து வந்தனர். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவர் கணவரை பிரிந்து சுபாஷ் உடன் லிவ் இன் முறையில் வாழ்த்து வந்தார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக சுபாசுக்கும், ராதிகாவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இதனால் சுபாசை விட்டு ராதிகா பிரிந்து சென்றுள்ளார். ஆனால் ராதிகாவுக்கு சுபாஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் சுபாஷ் மீது ராதிகா போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பிருந்தாவன் பகுதியில் உள்ள வீட்டில் ராதிகா வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு நேற்று சென்ற சுபாஷ், லிவ் இன் காதலி ராதிகாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுபாஷ் தான் கொண்டு வந்த கத்தியால் ராதிகாவை சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அதே வீட்டில் உள்ள அறையில் சுபாஷ் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.