நிதி நெருக்கடி: மனைவியை கழுத்தை நெரித்து கொன்று கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சன்
நிதி நெருக்கடி: மனைவியை கழுத்தை நெரித்து கொன்று கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சன் (வயது 42). இவரது மனைவி லீசா (வயது 35). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே, ஜில்சன் குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ள ஜில்சன் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, பிள்ளைகளின் அறையை பூட்டிய ஜில்சன் தனது மனைவி லீசாவை செல்போன் சார்ஜர் ஒயரை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், மரத்தின் கிளை முறிந்ததால் வீட்டில் உள்ள கத்தியை கொண்டு தனது கையை அறுத்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த விஷத்தையும் குடித்துள்ளார்.

மனைவியை கொலை செய்வதற்குமுன் இதுகுறித்து நள்ளிரவு தனது நண்பருக்கு செல்போனில் மெசேஜை அனுப்பியுள்ளார். மறுநாள் (இன்று) காலை அந்த மெஜேசை அந்த நபர் பார்த்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அண்டை வீட்டார் ஜில்சன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு லீசார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். விஷம் குடித்த ஜில்சன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். ஜில்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நெருக்கடியால் ஜில்சன் தன் மனைவி லீசாவை கொலை செய்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com