

புலந்த்சாகர்,
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் பசுக்கள் இறந்து கிடந்ததால், அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர் மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்து. வன்முறை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சுபோத் குமாரை சுட்டுக் கொன்றதாக பிரசாந்த் நாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து புலந்த்சாகர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அதுல் குமார் ஸ்ரீ வாஸ்தவா கூறுகையில், பிரசாந்த் நாத்திடம் விசாரணை நடத்தினோம். அவர், சுபோத் குமாரை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர் உள்பட இதுவரை 29 பேரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளோம் என்றார்