

ஆமதாபாத்,
பிரதமர் மோடியின் மூன்று ஆண்டுகால வெற்றியை பா.ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. குஜராத் மாநிலம் அமரெலியில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். அப்போது வந்தே மாதரம் என கோஷம் எழுப்பிய வாலிபர் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மீது வளையல்களை வீசினார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் வாலிபர் 20 வயது கேதான் காஸ்வாலா என தெரியவந்து உள்ளது, அவர் அமரெலி மாவட்டம் மோதா பன்டாரியா கிராமத்தை சேர்ந்தவர்.
கூட்டம் நடந்த மேடையில் இருந்து சில தொலைவில் இருந்த கேதான் திடீரென எழுந்து வளையல்களை வீசிஉள்ளார்.
முன்னதாக கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசார் 25 பேரை கைது செய்தனர்.
உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி பேசுகையில், மாநிலம் முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக காஸ்வாலா வளையல்களை வீசினார் என்றார். ஆனால் போலீஸ் அதனை மறுத்துவிட்டது.
வாலிபர் கேதான் காஸ்வாலா எந்தஒரு கட்சியையும் சார்ந்தவர் கிடையாது, வளையல்களை வீசிய போது வந்தே மாதரம் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்பினார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. கூட்டத்தில் இருந்த ஸ்மிரிதி இரானி, வாலிபரை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு போலீசிடம் கேட்டுக் கொண்டு உள்ளார். போலீஸ் அவரை வெளியே அழைத்து சென்று உள்ளது. ஸ்மிரிதி இரானி பேசுகையில், அவர் வளையல்களை வீசட்டும், அதனை அவருடைய மனைவிக்கு பரிசாக வழங்குவேன் என பேசிஉள்ளார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மத்திய மந்திரிகள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மே மாதம் 28-ம் தேதி ஹர்திக் படேல் இயக்கத்தினர் மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா மீது ஷூவை வீசினர், மத்திய அரசு படித்த இளைஞர்களுக்காக எதையும் செய்யவில்லை என சாடினர்.
எல்லையில் இந்திய வீரர்களின் உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்த நிலையில் பிரதமர் மோடிக்கு, ஸ்மிரிதி இரானி வளையல்களை அனுப்புவாரா? என காங்கிரஸ் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.