மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
Published on

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான மணிப்பூர் தேசிய புரட்சிகர முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் டெல்லூ மகா லெய்காயில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாதுகாப்புப்படையினர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் மறைவிடத்தை கண்டுபிடித்து அங்கிருந்த 7 பயங்கரவாதிகளை கைது செய்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் இருந்து ஏ1 ரக துப்பாக்கி, 15 தோட்டாக்கள், ஏகே 47ரக துப்பாக்கி, செல்ப்-லோடிங் ரைபிள்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ஐந்து உள்ளிட்ட சில ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com