

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சைபுதின் சோஸ், தனது புதிய புத்தகத்தில் காஷ்மீரிகளின் முதன்மை விருப்பம் சுதந்திரமே என்று கூறியது, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சைபுதின் சோஸ் தனது புத்தகத்தில், காஷ்மீரிகளுக்கு சுதந்திரமே முதன்மை விருப்பம். முஷாரப்பும் இதே கருத்தை கூறினார். முஷரப்பின், கணிப்பு இன்று கூட சரியானதே என்று தெரிவித்துள்ளார். சைபுதின் சோஸ், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். சைபுதின் சோஸ் கருத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சைபுதின் சோஸ் எழுதிய புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், மன்மோகன்சிங், புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில், தேசியவாதத்தை முன்வைத்து பெரிய அளவில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மன்மோகன்சிங் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.