

புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
இந்நிலையில் 83வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில், நாளை காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். மான் கி பாதி (#MannKiBaat) என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக சென்ற மாதம் நிகழ்த்திய உரையில், கொரோனா வைரஸ்க்கு (கோவிட் -19) எதிராக நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தை வெற்றிகரமாக செய்ததற்காகவும், ஒரு பில்லியன் தடுப்பூசி டோஸ்களை செலுத்தி புதிய மைல்கல்லை கடந்ததற்காகவும் இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.