

மும்பை,
மராட்டிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி அம்ருதா பட்னாவிஸ். ஆக்சிஸ் தனியார் வங்கியில் 20 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதனை அவர் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். அவர் வங்கியில் சீனியர் துணை தலைவராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளபோது ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். வங்கி அதிகாரி என்றில்லாமல், அவர் பின்னணி பாடகியாகவும், சமூக பணியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
எனினும், வருங்கால திட்டம் பற்றி எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்சிஸ் வங்கியில் இளம் நிர்வாக பயிற்சியாளராக சென்றேன். இன்று சீனியர் துணை தலைவராக முழுமனதிலும் நன்றியோடு பணியில் இருந்து விலகுகிறேன்.
கிளைகளில் செயல்பாடு முதல் கார்ப்பரேட் வங்கி வரையிலும், பொருளாளர் முதல் வாடிக்கையாளர் தொடர்புகள் வரையிலும் எனக்கு பணி அனுபவம் கிடைத்துள்ளது.
இந்த வங்கி என்னுடைய குடும்பம், ஆசிரியர் மற்றும் 2-வது வீடு என உணர்ச்சிப்பெருக்குடன் குறிப்பிட்டு உள்ளார். உடன் பணியாற்றியோர், தலைவர்கள் உள்ளிட்டோருக்கும் வங்கிக்கும் தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.