

வாஷிங்டன் டி.சி.,
காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று நடத்தினார்.
அதில் பேசிய அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் (1 பில்லியன் என்பது 100 கோடி) அமெரிக்க டாலரை செலவிட முடிவு செய்துள்ளோம் என்றார். இதற்கு முன், அமைதி வாரியத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடந்து அவர் பேசும்போது, ஐ.நா. சபையுடன் நெருங்கி பணியாற்ற போகிறோம். நாங்கள் அவர்களை திரும்ப அழைத்து வர இருக்கிறோம். நான் இதுவரை எட்டு போர்களில் ஒன்றை பற்றி கூட அவர்களிடம் பேசியதில்லை. ஆனால் எல்லாவற்றை பற்றியும் நான் அவர்களிடம் பேசியாக வேண்டும் என கூறினார்.
ஒரு நாள் நான் இல்லையென்றாலும் கூட, ஐ.நா. சபை மிகவும் வலுவாக இருக்கும் என நினைக்கிறேன். ஐ.நா. சபையை அமைதி வாரியம் நன்றாக கண்காணிப்பதுடன், அதன் செயல்பாடுகளையும் உறுதி செய்ய போகிறது. ஆனால் நாங்கள் ஐ.நா. சபையை வலுப்படுத்த முடிவு செய்து இருக்கிறோம்.
அதன் வசதிகள் நன்றாக இருப்பதும் உறுதி செய்யப்படும். அவர்களுக்கு உதவி தேவை. அதுவும் பணம் சார்ந்த உதவி தேவையாக உள்ளது. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.