மராட்டியம்: மொபைல் போனில் விளையாட தந்தை எதிர்ப்பு; தற்கொலை செய்த சிறுவன்

சிறுவன் மொபைல் போனில் விளையாடியபோது, அதனை கவனித்து, போனை பறித்த அவனுடைய தந்தை, போய் தூங்கும்படி கூறியுள்ளார்.
மராட்டியம்: மொபைல் போனில் விளையாட தந்தை எதிர்ப்பு; தற்கொலை செய்த சிறுவன்
Published on

மும்பை,

மராட்டியத்தில் மும்பை நகரில் மலாட் மல்வானி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் போனில் விளையாடும் வழக்கம் கொண்டிருந்துள்ளான்.

இதனை கவனித்த அந்த சிறுவனின் தந்தை தொடக்கத்தில் கவனிக்காமல் விட்டபோதும், சிறுவன் அதற்கு அடிமையாகும் அளவுக்கு போயுள்ளான். இரவிலும் போனில் விளையாடி விட்டு, தூங்காமல் இருந்துள்ளான். இதனால், சிறுவனை அவனது தந்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அந்த சிறுவன் மொபைல் போனில் விளையாடியபோது, அதனை கவனித்து, போனை பறித்த அவனுடைய தந்தை, போய் தூங்கும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுவன் பதிலுக்கு, போனில் விளையாட விடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளான்.

அடுத்த நாள் காலை, சிறுவனை சென்று பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்து போயுள்ளார். சிறுவன் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டான். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்து விட்டான் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி மல்வானி போலீசார் விசாரணை நடத்தி, சிறுவனின் தந்தையிடம் வாக்குமூலம் பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com