7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி..?

லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
Published on

ராஜஸ்தான்,

ராஜஸ்தான் மாநிலம் போபாலில் 7 மாதங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற அனுராதா பஸ்வானை (23) என்ற பெண்ணை போலீசார் வலைவிரித்துப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக ஆதரவற்று நிற்கதியாக நிற்கும் ஏழைப் பெண் போல நடித்து வந்த அந்த இளம்பெண் பலரையும் திருமணம் செய்து, குடும்பத்தில் நற்பெயர் எடுத்த பிறகு, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுராதாவின் நடமாட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

இதன்படி கடந்த 7 மாதங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேரை மணமுடித்து அவர் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. "லூட் & ஸ்கூட்" என அடையாளப்படுத்தப்படும் அனுராதா எனப்படும் அந்த பெண்ணை, போபாலில் வைத்து மதோப்பூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருமண மோசடிகளில் ஈடுபட்ட அந்த பெண், திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டதாக போலீசார் விளக்கமளித்தனர்.

புகாரின்பேரில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், அனுராதா குறித்து தேவையான தகவல்கள் அனைத்தையும் சேகரித்த பிறகு, போலீசார் ஒருவரே மணமகள் வேண்டும் என கூறி திருமண ஏஜெண்டுகளை நாடியுள்ளார். அதன்படி, ஏஜெண்ட் ஒருவர் அனுராதாவின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பகிர, உடனடியாக அவரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில் விஷ்ணுவிடம் இருந்து தப்பிச் சென்ற பிறகு அந்த பெண், போபாலில் உள்ள கப்பார் எனும் நபரை திருமணம் செய்து ரூ.2 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்னை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறினார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்-ஆப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்ததும் ஒரே வாரத்தில் மணமகனை விட்டு ஓடிவிடுவதை அந்த பெண் வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com