

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாநகராட்சி மேயராக பாஜகவை சேர்ந்த மீனல் சவுபாய் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். மீனலின் மகன் மீஹல் சவுபாய்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீஹல் சவுபாயின் பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, மீஹல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் மேயர் மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வலுத்தது. இதனை தொடர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் மீஹல் சவுபாய் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.