பிஎன்பி மோசடி: வைர வியாபாரி நிரவ் மோடிக்கு வெளியுறவுத்துறை, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடிக்கு வெளியுறவுத்துறை நோட்டீஸ் விடுத்து உள்ளது.
பிஎன்பி மோசடி: வைர வியாபாரி நிரவ் மோடிக்கு வெளியுறவுத்துறை, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் சிக்கின. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி இந்திய வெளியுறவுத்துறைக்கு அமலாக்கப்பிரிவு கோரிக்கையை அனுப்பியது. அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையில் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் நிரவ் மோடி மற்றும் அவருடைய வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட் செல்லுபடிதன்மையை உடனடியாக ரத்து செய்தனர், 4 வார காலங்களுக்கு இது அமலில் இருக்கும்.

பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்ய கூடாது? ரத்து செய்யக்கூடாது? என கேள்வியை எழுப்பி வெளியுறவுத்துறை இருவருக்கும் நோட்டீஸ் விடுத்து உள்ளது. சரியான நேரத்தில் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இருவரும் தங்களுடைய பதிலை ஒரு வாரங்களுக்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் விடுத்து உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி (பிஎம்எல்ஏ) இருவருக்கும் நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது. ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர் என்பதால் அவர்களுடைய நிறுவனத்தின் இயக்குநர்களிடம் நோடீஸ் வழங்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நியூயார்க்கில் நிரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஜனவரி 31-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டை விட்டு ஜனவரி மாத தொடக்கத்திலே சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது. இதற்கிடையே நிரவ் மோடி நியூயார்க்கில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com