நிகழ்ச்சிகளில் சைரன் ஒலியை பயன்படுத்துவதில் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


நிகழ்ச்சிகளில் சைரன் ஒலியை பயன்படுத்துவதில் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2025 4:12 PM IST (Updated: 10 May 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

சைரன் ஒலி பயன்பாடு பற்றி மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு சார்பில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கை அடைந்து அதற்கேற்ப பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விடுவர். தற்காத்து கொள்ளும் செயலிலும் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், இந்த சைரன் ஒலியை செய்தி சேனல்கள் ஒலிபரப்புவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட உத்தரவில், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் 1968-ன்படி, சமூக விழிப்புணர்வு இயக்கத்திற்கான நிகழ்ச்சிகள் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளில், பாதுகாப்புக்கான வான்வழி சைரன் ஒலியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அனைத்து செய்தி மற்றும் ஊடக சேனல்களிடமும் வேண்டுகோளாக கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த சைரன் ஒலி பயன்பாடு பற்றி மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

அனைத்து ஊடக சேனல்களும் சைரன் ஒலியை தங்களுடைய நிகழ்ச்சிகளில் வழக்கம்போல் பயன்படுத்தும்போது, வான்வழி சைரன் ஒலிக்கான பொதுமக்களின் உணர்திறன் குறைந்து போக கூடும். இதனால், உண்மையான வான்வழி சைரன் ஒலியை எழுப்பும்போது, ஊடக சேனல்கள் வழக்கம்போல் எழுப்பக்கூடிய சைரன் ஒலிதானே என தவறுதலாக மக்கள் புரிந்து கொள்ள கூடும் என மத்திய உள்விவகார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story