

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராணுவத்தினர் பல இடங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நலத்தை காக்கும் விதமாக, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த இணையதளம் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும்.
இந்த இணையதளத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் ராணுவத்தினர் தன்னலம் கருதாது, மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கும் நோக்கில், ஆன்லைனிலேயே மருத்துவ ஆலோசனைகளை பெற, இந்த இணையதளம் மிக உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.