

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் இருந்து, விமானம் மூலமாக 109 வெண்டிலேட்டர்கள் மற்றும் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. தொடர்ந்து மருத்துவ உபகரணங்களை வியட்நாம் அரசு அனுப்பி வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தெரிவித்துள்ளார்.