

புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. ஜம்மு காஷ்மீர் நிலவும் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நியமித்துள்ள தினேஷ்வர் சர்மா பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பதட்ட நிலையை முடிவுக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் உள்துறை மந்திரியிடம் மெகபூபா முப்தி விளக்கினார். கதுராவில் நடைபெற்ற என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி மட்டும் 60 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 15 பாதுகாப்பு படையினர் 17 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.