

மும்பை,
மராட்டிய மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் அம்பாஜோகாயில் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மந்தார் தபாடே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆம் தேதி தனது வாடகை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது மொபைல் போன் கடவுச்சொல்லை (Password) தனது சகோதரருக்கு அனுப்பியிருந்தார். அதன் மூலம் அந்த மொபைலை ஆய்வு செய்தபோது, மிரட்டல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிகிறது.
அதே பகுதியில் வசிக்கும் விவாகரத்தான பெண் சினேகல் பாட்டீல், அந்த மருத்துவருக்கு ஆபாசமான உரையாடல்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மந்தார் தபாடேவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இல்லையெனில், தானும் தற்கொலை செய்து கொண்டு அதற்கு அவர்தான் காரணம் என பழிவாங்குவதாக மிரட்டியுள்ளார்.
மருத்துவருடைய சகோதரர் அளித்த புகாரின் பேரில், சினேகல் பாட்டீல் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று அதிகாரி கூறினார்.
தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.