

கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் நடனமாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் முதல்-மந்திரி வி.டி. சதீசன் நடனமாடுவது போன்ற அந்த விடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். திருச்சூரைச் சேர்ந்த ‘ரீச் யூ டாட்’ நிறுவனத்தின் ‘ஏஐ காவாலா’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த விடியோ உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் உரிமையாளரான அபிஜித் கே.எஸ்., ஒரு புகாரின் அடிப்படையில் இந்தியாவில் அந்த விடியோ நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு தகவல் வந்ததாக தெரிவித்தார். எனினும், விடியோ நீக்கப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, இந்த விடியோ குறித்து முதல்-மந்திரி வி.டி. சதீசன் கருத்து தெரிவித்துள்ளார். விடியோவை பார்த்து ரசித்ததாக கூறிய அவர், அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் இதுபோன்ற படைப்புகள் தொடர்பாக சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அந்த விடியோவை பார்த்தபோது, மோகன்லால் மற்றும் எனது நண்பரான தமிழக முதல்-மந்திரி விஜய் ஆகியோரை விட நான் சிறப்பாக நடனமாடியிருப்பதை பார்த்தேன். இதனை கண்டு நான் திகைத்தும் அதிர்ச்சியும் அடைந்தேன்.தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, நடனம் என அனைத்தையும் உருவாக்க முடிகிறது. இந்த புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகளை சட்டரீதியாக நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?’’ என்று கேள்வி எழுப்பினார்.செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் படைப்புகளின் சட்டரீதியான தாக்கங்கள் குறித்தும், தற்போதைய சட்டக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதல்-மந்திரி வி.டி. சதீசன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், முதல்-மந்திரி வி.டி. சதீசன் நடனமாடுவது போன்ற ஏஐ விடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.