புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி - பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி - பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா சென்றவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட ஊர்களில் கட்டிட பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளை மீறி சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

நிதிச்சுமை

வெளிமாநில தொழிலாளர்களை நீண்ட நாட்கள் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கும் தொடரப்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து பராமரிப்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பதோடு, நிதிச்சுமையும் ஏற்படுகிறது.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.

சொந்த ஊர் செல்ல அனுமதி

அத்துடன், வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது.

இதனால் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

பஸ்களில் அனுப்ப வேண்டும்

ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கிறார்கள். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறியவேண்டும்.

அவர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டும் பஸ்களில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பஸ்களில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்த பஸ்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை

தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களை பரிசோதித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

வளைகுடா நாடுகள்

இதேபோல், கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, மே 3-ந் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள், ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் டெல்லியில் நேற்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகள்

இதற்காக தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வந்த பின் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

3-ந் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com