

ஸ்ரீநகர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ்காரர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தங்களது அட்டூழியத்தை அரங்கேற்றி வருகின்றனர். காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் கொட்டத்தை அடக்க ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹூராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ராணுவம், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அடங்கிய சிறப்பு குழுவினர் குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதையறிந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டையில் முதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் தொடர்ந்து ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கையில் சிறிது நேரத்திலேயே மேலும் 2 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலியாகினர். அவர்கள் யார்? எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்? என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சோபியான் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்த 2-வது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே 17-ந் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.