

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பாங்கார்மாவ் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் குல்தீப் செங்கார். இவர் உன்னாவ் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பா.ஜனதா இவரை கட்சியில் இருந்து நீக்கியது.
இந்த கற்பழிப்பு வழக்கில் குல்தீப் செங்கார் எம்.எல்.ஏ.வுக்கு டெல்லி கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் அந்த தேதியில் இருந்து அவரது பாங்கார்மாவ் தொகுதி காலியானதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. குல்தீப் செங்காருக்கு டெல்லி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விதிகளின்படி அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழக்கிறார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.