

ஸ்ரீநகர்
காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூலை 8 ம் தேதி ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பர்ஹான் வானி இறந்ததன் காரணமாக, கலவரம் பரவாமல் தடுக்க மெபைல் இணைய சேவைகள் சுமார் ஐந்து மாதங்களாக துண்டிக்கப்பட்டன. அதன் பின் ஜனவரி 27 அன்று சரி செய்யப்பட்டன
இதேபோல் கடந்த மே மாதம் 27 அன்று புல்வாமா பகுதியில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சப்சார் அஹமது பட்டும் மற்றொரு தீவிரவாதியும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக சுமார் ஒரு வாரம் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் ஸ்ரீநகரின் ரங்கெட் பகுதியில் நேற்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு இளைஞர் காயம் அடைந்தார். எனவே இன்றும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற அச்சத்தில் அங்கு அனைத்து மொபைல் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குல்கம் கிராமத்திலுள்ள அர்வனி கிராமத்தில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிசூடு நடைபெற்றது. அங்கு ராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் மற்றும் நேரடி இணையதள சேவைகள் குறைந்த வேகத்தில் செயல்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவாமல் தடுக்க பள்ளதாக்கு பகுதிகளில் அனைத்து 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இது தெழில் வல்லுனர்கள், ஊடக நபர்கள், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.