

புதுடெல்லி
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என சுப்ரீம் கோர்ட்டில் தெஹ்ஸின் பூனாவல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரனுமான துஷார் காந்தி ஆகியோரால் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது பசு பாதுகாவலர்கள் எனக் கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. அப்போது தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
இந்த விவகாரத்தில் மக்களை பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற வன்முறைகளை தடுக்க, புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம் ஆலோசனை நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.